புதுடெல்லி: விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தியா தொடர்பான அமெரிக்க தூதரக கேபிள் செய்திகள் இந்திய அரசியலை கலக்கிவருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.இதனையடுத்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அரசை கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். ஜாட் தலைவர் அஜீத் சிங்கின் ‘ராஷ்ட்ரீய லோக்தள்’ கட்சியின் நான்கு எம்.பிக்களுக்கும், அரசுக்கு ஆதரவளிக்க 10 கோடி ரூபாய் அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மாவின் அரசியல் உதவியாளர் என அறிமுகப்படுத்திய நசிகேதா கபூர் என்பவர் அமெரிக்க அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
எம்.பிக்களுக்கு அளிக்கவிருந்த பணம் அடங்கிய இரண்டு பெட்டிகளை அமெரிக்க அதிகாரியிடம் அவர் காட்டியுள்ளார். பல்வேறு எம்.பிக்களை விலைக்கு வாங்க காங்கிரஸ் கட்சியின் வசம் 50 முதல் 60 கோடி ரூபாய் வரை பணம் உள்ளதாகவும் இவர் அமெரிக்க அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி அமெரிக்க தூதரக அதிகாரி ஸ்டீவன் வைட் இச்செய்தியினை வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.







No comments:
Post a Comment