May 10, 2013

தாம்பத்யம் சிறக்க முருங்கை சாப்பிடுங்கள்!

மே 11: தாம்பத்யம் சிறக்க முருங்கை மரத்தின் பூ, காய், விதை இவைகள் உதவி புரிகின்றன. மேலும் முருங்கை கீரை கண் பார்வை அதிகரிக்கவும், உடலுக்கு பலமும் அளிக்கிறது.  

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுப்பெறும்.

* முருங்கை மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும்.

* முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். 

May 9, 2013

ஹிட்லரை பார்க்கனுமா? இலங்கைக்கு போங்கள்!

மே 09: இலங்கை சிங்கள பேரினவாத அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலையை தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும்  அடக்கு முறைகளை கட்டவிழ்த்து வந்தது. 

அதன் தொடர்ச்சியாக, பத்திரிக்கையாளர்கள் கைது, பத்திரிகை அலுவலகங்கள் தாக்குதல் ஜனநாயக ரீதியா பேச்சு சுதந்திரம் பறிப்பு, தொழில்  நிறுவனங்கள் மீதான சூறையாடுதல், மத ரீதியான உரிமைகள் மறுப்பு போன்ற பல்வேறு சர்வாதிக்கார அடக்கு முறைகளை சிறுபான்மை தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள்  மீது  திட்டமிட்டு நடத்தி வருகிறது சிங்கள பேரினவாத அரசு

இந்நிலையில் கொழும்பு நகரின் முன்னாள் துணை மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளருமான அஸத் ஸாலி அவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் நாட்டில் ஒரு வார இதழுக்கு கொடுத்த  பேட்டியை காரணமாக காட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது சிங்கள பேரினவாத இயக்கங்களின் அக்கிரமங்களை எதிர்த்து குரல் எழுப்பி வரும் மிகச் சிலரில் அஸத் ஸாலி முக்கியமானவர்.

இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சி என்று ராஜபக்சே மார்தட்டி கொண்டாலும் தினமும் ஏதாவது ஒரு செய்தி ராஜபக்சேவின் சர்வாதிகார ஆட்சியை அம்பலத்து கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. ஹிட்லரை யாரும் நேரில் பார்க்க வில்லையே என்று வருந்த வேண்டாம். ஹிட்லரை பார்க்க வேண்டுமா இலங்கைக்கு போங்கள். 

*ஒன்றரை இலட்சம் உயிர்களை வேட்டையாடிய மனித மிருகம்* 

May 6, 2013

உச்ச நீதி மன்றத்தின் மக்கள் விரோத தீர்ப்பு!

மே 07/2013: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், போதிய பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவற்றை ஆய்வு செய்த நிபுணர்கள் குழு கூறியுள்ளதை ஏற்று, அணு மின் நிலையத்தை செயல்பட, அனுமதி அளித்து மத்திய அரசின் கை பொம்மை ஆகியிருக்கிறது உச்ச நீதி மன்றம். 

மேலும் அந்த தீர்ப்பில் கூறி இருக்கும் விசயங்கள் மிகவும் வேடிக்கையானது. இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் பொது நலன் கருதியே, இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை' என, சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறி இருக்கிறது.

 "கூடங்குளம் அணு மின் நிலையத்தில், முறையான பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், எங்களின் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கும்' என, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல் சுப்ரீம் கோர்ட் மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் புறம்தள்ளி இருக்கிறது. 

"பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் இங்கு சேரும், அணுக் கழிவுகளை எங்கு கொண்டு செல்வது, அணு மின் நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு மத்திய அரசும், அணு சக்தி துறையும் சரியான பதில் அளிக்க வில்லை. தீர்ப்பை கொடுத்த நீதி அரசர்களாவது பதில் அளிப்பார்களா என்று பார்த்தால் அவர்களும் அளிக்க வில்லை.

சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில், இந்திய அணுசக்தி கழகத்தின் கொள்கைகளை முழுமையாக ஏற்கிறதாகவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆய்வு செய்த, அனைத்து குழுக்களும், அணு மின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்தை ஏற்பதாக கூறி தீர்ப்பை வழங்கி உள்ளது. பாபர் மசூதி தீர்ப்பில் குரங்கு கையில் பூமாலை போல் ஒரு முத்தரப்பு தீர்ப்பு வழங்கியது போல் இம்முறையும் மக்களின் நலன்களையும், நியாயமான கோரிக்கைகளையும் புறம்தள்ளி அரசு தரப்பு நியாயங்களை மட்டும் வைத்து ஒரு மோசடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. இது அரசு சார்புடைய மக்கள் விரோத தீர்ப்பே!
  
* மலர் விழி* 

May 5, 2013

அரசு பயங்கரவாதம் சாடுகிறார் அருந்ததிராய்!

மே 06/2013: ‘மக்களுக்கு எதிரான போர்’ என்ற தலைப்பில் டெல்லி  ராஜேந்திரபிரசாத் பவனில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பல்வேறு தரப்பட்ட  சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.                              
அதில் பேசிய  பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் காலனியாதிக்க ஆட்சியின் தொடர்ச்சியே இந்திய அரசு பயங்கரவாதம் என்று  கடுமையாக சாடினார்.
1947-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரமடைந்த வேளையில் காலனி அரசுதான் நாட்டில் அதிகாரத்திற்கு வந்தது. தெலுங்கானா, வங்காளம் உள்ளிட்ட  நாட்டின் எல்லைக்கு உள்ளாகவே ராணுவத்தை அனுப்பி அரசு சொந்த குடிமக்களுக்கு எதிராக போரை நடத்தியது. இவ்வகையான போர்கள் இன்றும் தொடர்கின்றன. 
இந்திய அரசு உயர்சாதி அரசாகும். இந்த அரசின் குணத்தை உலகின் வேறு எந்த அரசுடனும் ஒப்பிட முடியாது. சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நிலபிரபுத்துவம் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.  முந்தைய காலங்களில் நடத்திய சீர்திருத்தங்களின் பலனாக ஏற்பட்ட நலன்கள் கூட பலம் பிரயோகித்து மக்களிடமிருந்து பிடுங்கபடுகின்றன. உண்மையில் நாட்டை ஆள்வது மன்மோகன் சிங் அல்ல. டாட்டா, அம்பானி போன்ற தொழிலதிபர்கள்தான். ஆகையால்தான் முகேஷ் அம்பானிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் கூறியதாவது, சட்டத்தை அமல்படுத்தும் அரசே அதனை மீறுகிறது. சட்டங்களை இலகுவாக்குவதுடன், கறுப்புச் சட்டங்களையும் அரசே உருவாக்குகிறது. அப்ஸா, யு.ஏ.பி.ஏ, உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களால் பாதிக்கப்படுபவர்கள் பழங்குடியினரும், தலித்துகளும், தொழிலாளர்களும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை  மக்களே. இது போன்ற கருப்பு சட்டங்களை நீக்க மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் அவசியம் என்றார்.

May 4, 2013

கூண்டில் அடைபட்டது புலியா? பூனையா?

மே 05/2013 ராமதாசை கைது செய்து ரவூடிச  அரசியலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 

ராமதாஸ் கைது: மும்பை  பால்தாக்ரே போல் தான் கண் அசைத்தால் என்ன நடக்கும் தெரியமா? என்று வீர வசனம் பேசிய ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலவரம்: ராமதாஸ் கைது செய்யப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வட தமிழகம் எங்கும் கலவரத்தில் ஈடுபட்டனர். 

பாலம் தகர்ப்பு: மரங்களை வெட்டி சாலைகளில் போட்டு பொது அமைதியை கெடுத்தனர். திண்டிவனத்தில் இருந்து புதுவை போகும் வழியில் உள்ள ஒரு பாலத்திற்கு வெடிவைத்து தகர்த்தனர். 

பஸ் உடைப்பு மற்றும் தீக்கிரை: ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 3 பஸ்களை தீவைத்து கொளுத்தி உள்ளனர். இதுவரை 200 க்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் திருவண்ணாமலை அருகில் 50 புதிய டூ வீலர் வாகனங்களை ஏற்றி வந்த வெளிமாநிலத்து கன்டெய்னர் வாகனத்தை  பெட்ரோல் குண்டை வீசி தாக்கி உள்ளனர்.  இதில் வாகனம் தீக்கிரை ஆகி அதன் ஓட்டுனர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளார்.

கருணாநிதியின் கேடுகெட்ட அறிக்கை: பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.  சிங்கள பேரினவாதம் ஈழமக்களை கொல்லும் இப்படி பேசித்தான் அரசியல் நடத்தினார்.

கருணாநிதிக்கு கண்டனம்: ராமதாசுக்கு நாவடக்கும் இல்லாமல் பேசுவது இயல்புதானாம், ராமதாஸின் நாவடக்கம் இல்லாத அடாவாடி பேச்சு அவரோடு நின்றால் பராவயில்லை அது கலவரத்தை உண்டாக்கி உயிர் பழியையும், தீராத பகையையும், பொது சொத்துக்கும் கேடு விளைவித்து இருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் விட இவர் விசயத்தில் என்ன இருக்கிறது?

சரியான தண்டனை: வன்னிய மக்களின் அமைதியை கெடுத்து, அவர்களுக்கு நன்மை செய்யப் போகிறேன் பேர்வழி என்று சொல்லி கருணாநிதி மாதிரி தன் குடும்பத்தை வளர்க்கும் ராமதாசுக்கு இது சரியான தண்டனைதான். இவர் வன்னிய சமூதாய மக்களை மேம்படுத்துவதற்கு பதிலாக அந்த சமூகத்தின் பெயரை சொல்லி  தன் குடும்பத்தை மேம்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற தலைவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும்.

மேடையில் வாய் சொல் வீரராக வீர வசனம் பேசினார் ராமதாஸ் இப்பொழுது உள்ளே அடைபட்டதும் அம்மாவை எதிர்த்து ஒரு கருத்து கூட சொல்ல துப்பில்லை.  போதாதற்கு போலீஸ் அதிகாரிகள் கொடுத்த தவறான தகவலால்தான் அம்மா இப்படி செய்திருக்கிறார் என்று புலம்பி இருக்கிறார். கூண்டில் அடைபட்டது  புலி இல்லை பூனை என்பதை நிரூபனமாகி இருக்கிறது. 

May 2, 2013

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க மோகம்!

மே 3/2013: சமீப காலமாக இந்திய சினிமாகள் அமெரிக்க மோகத்தை உரமிட்டு வளர்க்கின்றன என்றே சொல்லலாம்.
அமெரிக்க மோகத்தின் தாக்கம் தமிழ் சினிமாக்களை கூட விட்டு வைக்க வில்லை. ஒவ்வொரு தமிழ் சினிமாவிலும் ஏதாவது ஒரு அமெரிக்க புராணம் பாடும் வசனம் இருக்காமல் இல்லை.
அதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் நமது தமிழ் புலவர்கள் சிவாஜி படத்திற்கு பாடல் எழுதினர். காவேரி ஆறும் கைகுத்தல் அரிசியும் மறந்து போகுமா என்கிற பாடலில் அண்ணன் வந்தால் தமிழ் நாடும் மாறும்  அமெரிக்கா என்கிற வரியை சேர்த்தனர். 
அதுபோல், விஸ்வரூபம் பட பிரச்சனையில் கமல் நான் இந்தியாவை விட்டு வெளியேற போகிறேன் என்று சொன்னது அமெரிக்காவில் செட்டில் ஆகும் நோக்கில்தான். இதை கூட அவர் விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் அந்நிய பெண்களுக்கு முத்தம் கொடுத்த காட்சிக்கு பின்னர், சில நண்பர்கள் என்னை ஹாலிவுட்டில் இருக்க வேண்டிய ஆள் என்று சொன்னதாக சொல்லி காட்டுவார்.
இப்பொழுது அதற்க்கெல்லாம் ஒருபடி மேல் சென்று அமெரிக்கா விசா கிடைத்தால்தான் ஒருவர் இந்திய பிரதமர் வேட்பாளருக்கே தகுதி பெற்றவர் என்கிற நிலை உருவாகி  விட்டது. அமெரிக்காவிற்கு விசா மறுக்கப்பட்ட ஒருவரை இந்திய பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் அவர் ஜெயிக்க முடியுமா என்கிற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. இந்த கேள்வி சுதேசி வேடமிட்டு நடிக்கும் மதவாத வர்ணாசிர கூட்டத்திற்கும் எளுந்துள்ளதுதான் இங்கே வேடிக்கை.
இந்நிலையில், குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை முன்னின்று நடத்திய நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர வேண்டும் என்று அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.  என்னதான் நரேந்திர மோடி முகத்தில் கரி பூசினாலும் இவருக்கு அமெரிக்க மோகம் குறையவில்லை. அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஹிந்துத்துவா அமைப்புகள் இவரை எப்படியாவது அமெரிக்க வரவழைத்து விட வேண்டும் என்று பல்வேறு வழிகளில் முயற்சிகளை  செய்கின்றனவாம். 
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக இவர் முன்னிறுத்தப்படும் பொழுது அமெரிக்க விசா மறுப்பு என்பது இவரது இமேஜை வெகுவாக பாதிக்கும் என்று ஹிந்துத்துவா இயக்கங்கள் நம்புகின்றன.
*மலர் விழி*